எழுதியது : சிறி சரவணா
சூரியனைப் போன்ற விண்மீன்கள், தங்கள் எரிபொருளான ஹைட்ரோஜனை முடித்துவிட்டால், அதன் பின்னர் அவை தனது அமைப்பைப் பேண முடிவதில்லை, இவை சிவப்பு அரக்கனாக (red giant) மாறி பல நூறு மடங்கு பெரிதாகும், இந்த நிலையில் விண்மீன்கள், தங்கள் வெளிப்புற படலத்தை அப்படியே வெளி நோக்கி வீசி விடும், எஞ்சிய அடர்த்தியான மையப்பகுதி இறுதியில் வெள்ளைக்குள்ளனாக (white dwarf) மாறிவிடும். இதுதான் நமது சூரியனது எதிர்காலமும்.
இப்படி வீசி எறியப்பட்ட வெளிப் படலம், பல்வேறுபட்ட வடிவங்களையும் நிறங்களையும் பெற்றுக்கொள்ளும். மையப்பகுதியில் இருக்கும் அடத்தியான மற்றும் வெப்பமான வெள்ளைக்குள்ளனில் இருந்து வெளிவரும் வேகமான கதிர்வீச்சுப் புயல், இந்த வெளிப் படலத்தை தொடர்ந்து வெளிநோக்கி தள்ளிக்கொண்டே இருக்கும். இவையே கோள்விண்மீன் படலம் (planetary nebula) எனப்படுகிறது.