முடிவில்லா இயற்க்கை

சத்தங்கள் சந்தங்கள் அழகாக பாடுகிறாய்
கனவிலும் நினையா வண்ணம்
இடை வளைத்து ஆடுகிறாய்
கன்னங்கள் குழிவிழ சிரிக்கும்
குழந்தைபோல ஆயிரம் ஆயிரம்
உணர்ச்சிகள், மடை திறந்த வெள்ளம் போல
பாய்ந்து வரும் அருவிகள் – அதன்
கரைகளில் இருக்கும் கற்களில்
மோதுண்ட நீர் வில்லைகள்
முத்துமணி ரத்தினங்களாய் வானத்தில் தெறிக்க
அதனுள்ளே பாய்ந்த ஒளி – தன்
ஆடைகளைக் களைந்துவிட்டு
தண்ணீரில் பாய விளையும் சிறுவனைப் போல
உற்சாகமாக பல வர்ணங்களில்
சிதறித் தெறிக்க -அந்தக் காட்சியின்
இயக்கத்தை முடித்துவிட்ட கையோடு
அந்த முத்துமணி ரத்தினங்கள்
கண்ணாடிக் குமிழிகளாக நிலத்தில்
மோதுண்டு மடிகிறதே – ஆனால்
அடுத்த நீர்க்குமிழியும் வருமே
ஒளியின் தோலுரிக்க… இயற்கையின் இயக்கம்
காதலுண்ட மங்கையின் நாணத்தைப் போல
முடிவற்றுச் செல்லும்!
– சிறி சரவணா

இயற்கையின் காதல்

உனக்காக காத்திருக்கிறேன் என் அன்பே
பற்பல குளிர்காலங்களும்,
எண்ணிலடங்கா கோடைகளும்
நீண்ட நாட்களாக…
எதிர்காலத்தின் விளிம்பிலே…
நாட்களும் கடந்துவிட்டன…
நேரமும் நெருங்கிவிட்டது…
நான் புறப்படும் நேரம் இதோ வந்துவிட்டது…
இரண்டாய் பிரிந்த மனதில்
ஒன்று இங்கேயும் மற்றொண்டு
அங்கேயுமாக அலைகிறதே…
உன் நினைவிலேயே அவை இரண்டும்
சிறையுண்டு கிடக்கிறதே…
உன் கட்டளைக்கு பணிந்தே…
நான் இன்று விடைபெறுகிறேன்
விண்மீன்களின் தூசாக நான் மாறிவிடுவேன்…
அதுதான் விதியென்று
நீ சொல்லிவிட்டாய் என் அன்பே…
என்மேல் கொண்ட காதலுக்கு நன்றி…
அன்பே… முடிவில்லாக் கனவில் இருந்து
என்னை வெளிக்கொண்டு வந்துவிட்டாய்…
இதோ வருகிறேன்.. நேரம் நெருங்கிவிட்டது…
உன்னோடு நேரமில்லா வெளியில்…
இரண்டிலா ஒன்றாய் கலக்க வந்துவிட்டேன்.

– சிறி சரவணா

காலத்தின் இறுதியொன்று

கால நுழைவாயில்
தன் நினைவை
அதனதன் வழியாக
உருமாற்றி வைத்திருக்கிறது.
அதில்
புதிர் நிறைந்த ஒரு நினைவை
தேர்ந்தெடுத்தேன்.
என்றோ கைவிடப்பட்ட நினைவு அது
எவ்வித தயக்கமின்றி
அனுமதித்தது அந்நினைவு
அன்றிருந்த காலம்
மீண்டும் உருப்பெறுகிறது.
ஒரு நிமிடம்
கடந்த நிலையில்
வழியெங்கும் நிகழ்கால நினைவு
தன்னைத் துரத்துகிறது .
மீண்டும் அடையாளமிட்ட
தன் நினைவை
அங்கயே விட்டு வந்தடைந்தேன்
மன்னிப்பாயாக.

வளத்தூர் தி. ராஜேஷ்

படம்: இணையம்

காற்றோடு கதை பேச

காற்றோடு கதை பேச நாள் ஒன்று கொண்டேன்
சொற்களின் கோர்வையை சரி பார்த்துக்கொண்டேன்
இதயத்தின் படபடப்பில் சொல்லொன்று தவற
அதன் அர்த்தமும் படியிறங்கி காற்றோடு போயிற்றே
வானவில் ஒன்று அழகாக வரலாம்
தொலைத்த சொல்லை அது தேடி வரலாம்
காற்றின் தூதுவனாய் மழைத்துளியும் சேர
உதய சூரியனின் கீற்றொண்டு பட்டு
சொல் விழுந்த இடத்தை தடம் போட்டுக்காட்ட
விழுந்த சொல்லை நான் பற்றிக்கொண்டேன்
காற்றோடு கதை பேச நாள் ஒன்று வேண்டும்
இன்னும் ஒருநாள் காத்திருக்க வேண்டாம்
விழுந்த சொல்லை கோர்வையில் இணைத்து
இதயத்தின் படபடப்பை அமர்முடுகி வைத்து
காற்றோடு கதை பேச தயாராகிவிட்டேன்

சிறி சரவணா

படம்: இணையம்

என்னுள்ளே என்னை தேடி

என்னுள்ளே என்னைத் தேடி

இனம்புரியாத கவலை நெஞ்சை மெதுவாக வருடுகிறது
நரம்பறுந்த இரத்தப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழப்பது போல
மெல்லிய கவலை மை இருளாக என் உலகத்தை நிரப்புகிறது
இதுவரை நடந்தது நன்றாக நடந்து விட்டது
இனிமேலும், நடப்பது நன்றகேவே நடக்குமா

Continue reading “என்னுள்ளே என்னை தேடி”